நெல்லை: நெல்லை நெல்லையப்பர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆனி பெருந்தேர் திருவிழா உற்சாகத்துடன் கொண்டாடப்படுவது வழக்கம். தேரோட்ட நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வடம்பிடித்து தேர் இழுப்பர். ரதவீதிகளில் ஐந்து தேர்கள் ஓடும் காட்சியை பக்கத்து மாவட்டத்தில் இருந்து வந்தும் தரிசிப்பர். கடந்த 500 ஆண்டுக்கும் மேலாக தடையின்றி நடந்துவந்த தேர் திருவிழா, கொரோனா என்ற பெரும் தொற்று பரவல் காரணமாக இந்தாண்டு வழக்கமான உற்சாகத்துடன் நடைபெறவில்லை. ஆனாலும் கடந்த 23ம்தேதி முதல் கோவில் உள் பிரகாரத்தில் கும்ப பூஜை, சிறப்பு ஹோம பூஜை, உச்சிக்கால பூஜை, தீபாராதனையும், மாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் ஷோடாசாரன தீபாராதனை நடைபெற்று வந்தது.