×

சர்வதேச விதிமுறைப்படி கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை: ஐசிஎம்ஆர் விளக்கம்

டெல்லி: சர்வதேச விதிமுறைப்படி கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை மேற்கொள்ளப்படும் என ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. மனிதர்கள், விலங்குகளிடம் சர்வதேச விதிமுறைப்படியே கொரோனா தடுப்பு ,மருந்து பரிசோதிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.

கொரோனாவுக்கான தடுப்பு மருந்து பரிசோதனையின் போது பாதுகாப்பே முக்கியம். அதில் சமரசமே கிடையாது என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. புனேவைச் சேர்ந்த பாரத் பயோடெக் தயாரித்து வரும் கொரோனா தடுப்பு மருந்தான BBV152ஐ மனிதர்களிடத்தில் பரிசோதனை செய்ய ஐசிஎம்ஆர் பரிந்துரை செய்தது. முதற்கட்ட சோதனையாக விலங்குகளுக்குச் செலுத்தப்பட்டதில் வெற்றி கிடைத்ததால் அடுத்தகட்ட சோதனைக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. இதனிடையே இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைமையகமும் இந்தப் பரிசோதனைக்கு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி ஜூலை 7 முதல் சோதனை முயற்சியாக கொரோனா தடுப்பு மருந்து பரிசோதிக்கப்பட உள்ளது என்று  ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. மேலும் சோதனை முயற்சி வெற்றி அடைந்தால் ஆகஸ்ட் 15 முதல் சிகிச்சைக்கு  பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக இந்தியா அளவில் 12 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சென்னை அருகே காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனை, விசாகப்பட்டினம், ரோஹ்டாக், டெல்லி, பாட்னா, பெல்காம், நாக்பூர், கோரக்பூர், ஹைதராபாத், ஆர்யா நகர், கான்பூர் மற்றும் கோவா ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

பரிசோதனைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகள் மருத்துவ பரிசோதனையைத் தொடங்குவது தொடர்பான அனைத்து ஒப்புதல்களையும் விரைவாகப் பெற்று தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்தச் சோதனைக்கு அனுமதி அளித்ததற்கு ஆராய்ச்சியாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டே தடுப்பு மருந்து பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக ஐசிஎம்ஆர் விளக்கமளித்துள்ளது.



Tags : ICMR ,Corona , Corona, Preventive Medicine, ICMR
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...