நீதிபதி பி.என்.பிரகாஷ் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மற்றம்..: ஐகோர்ட் மதுரை கிளையின் நிர்வாக நீதிபதியாக சத்தியநாராயணன் செயல்படுவார் என அறிவிப்பு!

மதுரை:  உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நிர்வாக நீதிபதியாக சத்தியநாராயணன் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு 3 மாதத்துக்கு ஒரு முறை சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து சுழற்சி முறையில் நீதிபதிகள் மாற்றம் செய்வது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் உயர்நீதிமன்ற கிளையில் 3 மாதங்களுக்கு மேலாக நிர்வாக நீதிபதியாக பணிபுரிந்த நீதிபதி பி.என்.பிரகாஷ், தற்போது சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக நீதிபதி எம்.சத்தியநாராயணன் நிர்வாக நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், உயர்நீதிமன்ற கிளையில் ஜூலை 6 முதல் நீதிபதிகள் விசாரிக்க உள்ள வழக்கு விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு, பொதுநல மனுக்கள், மேல்முறையீட்டு மனுக்கள், நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், டி.கிருஷ்ண வள்ளி அமர்வு ஆட்கொணர்வு மனுக்கள், குற்றவியல் மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும். நீதிபதி வி.பாரதிதாசன், ஜாமீன், முன்ஜாமீன், டி.கிருஷ்ணகுமார், கல்வி, நிலசீர்திருத்தம் , நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான ரிட் மனுக்கள், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வரி விதிப்பு, ஏற்றுமதி, இறக்குமதி, கனிமவளம் தொடர்பான ரிட் மனுக்கள், நீதிபதி பி.புகழேந்தி, சிபிஐ, ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: