சாத்தான்குளம் வழக்கில் கைதான காவல் ஆய்வாளருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடியில் நேற்று முன்தினம் ஓய்வு பெற்ற காவலர் சோமசுந்தரம் வீட்டில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 4 பேர் பரிதாபமாக பலியானார்கள். ஏற்கெனவே தூத்துக்குடி மாவட்டத்தில் தந்தை, மகன் சிறை மரணம் அடைந்த நிலையில் மேலும் ஒரு கொடூர சம்பவமாக நான்கு பேர் உயிரிழப்பு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 4 பேரின் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதன்படி, இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நான்கு பேரின் குடும்பத்தினருக்கும் நிவாரணம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் பங்கேற்றனர். உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கும் தலா 10 லட்சம் நிவாரண நிதியை அமைச்சர் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கும் உடனடியாக முதல்வர் நிவாரணம் அறிவித்தார். அதன்படி, இன்று நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு எந்த ஜாதி மத பாகுபாடின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறது என தெரிவித்தார்.

காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இது முற்றிலும் தவறான தகவல். பொய்யான வதந்தியை சில விஷமிகள் தவறாக பரப்புகிறார்கள். அது நிரூபணம் ஆகியுள்ளது என கூறியுள்ளார். முன்னதாக, சாத்தான்குளம் சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தபோது, அவர் அதிமுக அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமானவர் என்று கூறி மிரட்டியதாக தகவல் வெளியானது. அந்த அமைச்சர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கடம்பூர் ராஜூ என்றும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: