கள்ளிக்குறிச்சியில் புதிய மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்; 150 மருத்துவ இடங்கள் கிடைக்க வாய்ப்பு..!!

சென்னை: கள்ளிக்குறிச்சியில் புதிய மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம், விருதுநகா், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூா், நீலகிரி, திருவள்ளூா், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிக்கு ரூ.325 கோடி வீதம் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கும் மொத்தம் ரூ.3,575 கோடி செலவிடப்பட உள்ளது.இதில் மத்திய அரசு தனது பங்களிப்பாக 60 சதவிகித நிதியையும், மாநில அரசு 40 சதவிகித நிதியையும் செலவிட உள்ளது. இதுவரை 8 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார்.

இந்நிலையில், 9-வது புதிய கல்லூரியாக கள்ளக்குறிச்சிக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். ரூ.381.76 கோடி மதிப்பில் கள்ளிக்குறிச்சி அருகே சிறுவங்கூரில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவாங்கூரில் ரூ.381.76 கோடி மதிப்பில் அமைய உள்ள மருத்துவக் கல்லூரிக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழச்சியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி திறக்கப்பட்டால், தமிழகத்துக்கு கூடுதலாக 150 மருத்துவ இடங்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: