×

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி நீர்தேக்கம் வறண்டது: குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம்

திருவள்ளூர்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி நீர்தேக்கம் வறண்டு வருவதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்காக, சென்னை மாநகராட்சி மேயராக இருந்த சத்தியமூர்த்தியின் முயற்சியால், 1944, ஜூன் 14ம் தேதி ரூ.65 லட்சம் மதிப்பில் பூண்டி ஏரி என்ற சத்தியமூர்த்தி நீர்தேக்கம் கட்டி திறக்கப்பட்டது. தமிழக, ஆந்திர மாநில அரசுகளுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, 1983ம் ஆண்டு தெலுங்கு கங்கை திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி ஆண்டுதோறும், 12 டிஎம்சி நீரை, தமிழகத்திற்கு ஆந்திரா வழங்க வேண்டும். ஆந்திர மாநிலம், சைலம் நீர்த்தேக்கத்தில் இருந்து சோமசீலா, கண்டலேறு அணை வழியாக, 406 கி.மீ. தொலைவு திறந்தவெளி கால்வாயில் பயணித்து கிருஷ்ணா நீர் தமிழகம் வந்தடைகிறது.

பின்பு, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை, ‘ஜீரோ பாயின்ட்’ என்ற இடத்திலிருந்து, பூண்டி ஏரிக்கு தண்ணீரை எடுத்து செல்ல, 25 கி.மீ. தூரத்திற்கு கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. பூண்டி அணையின் உயரம் 35 அடி. மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி, ஏரியின் பரப்பளவு 121 சதுர கிலோ மீட்டர். மழை நீர் மற்றும் கிருஷ்ணா நீர்வரத்தால் அணை நிரம்பினால், பேபி கால்வாய், லிங்க் கால்வாய்களின் வழியாக செம்பரம்பாக்கம் ஏரி, சோழவரம் ஏரி, புழல் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்படும். இந்த ஏரியை வெட்ட 10 கிராமங்களில் இருந்த மக்களை வெளியேற்றி, வேறு இடங்களுக்கு குடியமர்த்தப்பட்டனர். சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக முதலில் கட்டப்பட்டது இந்த நீர்தேக்கம் தான். அதற்கு பிறகுதான், புழல், சோழவரம் ஏரிகள் சென்னையின் குடிநீர் தேவைக்காக மாற்றப்பட்டன. பூண்டி நீர்தேக்கத்தை பராமரிக்க, பொதுப்பணி துறை அலுவலகம் அருகிலேயே உள்ளது.

உயரதிகாரிகள் தங்குவதற்காக, இங்கு விருந்தினர் மாளிகை உள்ளது. இவ்வாறு பொதுப்பணித்துறை அலுவலகம், விருந்தினர் மாளிகை என அனைத்தும் இருந்தும், ஏரியை அதிகாரிகள் பராமரிக்காமல் விட்டுவிட்டனர். கடந்த 2015ம் ஆண்டு நவம்பரில் கனமழை பெய்தும், கொழுந்தலூர் பகுதியில் ஏரிக்குள் இருந்த மரங்களை வெட்டி மேடான பகுதியை தூர்வாராமல் விட்டதால், அப்பகுதியில் தண்ணீர் இல்லாமல் கிடந்தது. இதனால், ஏரியானது கனமழையால் முழு கொள்ளளவை எட்டியும், ஏரியின் மறுபுறம் தண்ணீரை சேமிக்க இயலாத அவலநிலை ஏற்பட்டது. தற்போதும் அப்பகுதியை தூர்வாராமல் விட்டுவிட்டதால் மண் மேடாக காட்சியளிக்கிறது.

அங்கு, ஏரியில் மாடுகளை மேய்த்தும், இளைஞர்கள் கிரிக்கெட் மைதானமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பின்படி,  ஏரியின் முழு கொள்ளளவு நீர், இருப்பு உள்ளதா என்பது கேள்வி குறியாக உள்ளது. அதே நேரத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயமும் உள்ளது. எனவே, பூண்டி ஏரியில் மேடான பகுதியை தூர்வாரி சரியான அளவு மழைநீரை சேமிக்க இனியாவது பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோருகின்றனர்.

Tags : lakes ,Chennai ,Pundi ,reservoir , Chennai, Drinking Water, Boondi Waters, Dry
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!