மேட்டூர்: வரத்தை விட பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 3 வாரங்களில் 13.52அடி சரிந்துள்ளது. மேட்டூர் அணை மூலம் டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி முதல் ஜனவரி 28ம் தேதி வரை டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 101.73 அடியாக இருந்ததால் குறித்த நாளான ஜூன் 12ல் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தொடக்கத்தில் வினாடிக்கு 2000 கன அடி வீதம் திறக்கப்பட்ட நீரின் அளவு படிப்படியாக 10 ஆயிரம் கனஅடி வரை அதிகரிக்கப்பட்டது. ஜூலை 1ம் தேதி பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.