காவல்துறையின் சீரமைப்பை உண்மையாக, நேர்மையாக அரசு செயல்படுத்த ஐகோர்ட்டில் மக்கள் நீதி மய்யம் வழக்கு

சென்னை: காவல்துறையின் சீரமைப்பை உண்மையாக, நேர்மையாக அரசு செயல்படுத்த ஐகோர்ட்டில் மக்கள் நீதி மய்யம் வழக்கு தொடர்ந்துள்ளது. போலீசின் அதிகாரத்தை கண்காணிக்க, மன அழுத்தம் இன்றி பணியாற்ற உச்சநீதிமன்றம் வழிமுறைகளை வழங்கியுள்ளது. உச்சநீதிமன்ற வழிமுறைகளை தமிழக அரசு பின்பற்ற உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் வழக்கு தொடர்ந்துள்ளது. இது தொடர்பாக தற்போது மக்கள் நீதி மய்யம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதை பின் வருமாறு காணலாம் ; சாத்தான்குளம் காவல்துறை அராஜகம் ஒற்றை நிகழ்வல்ல. தோண்டத் தோண்ட வெளிவரும் குற்றங்கள், ஒரு காவல் நிலையத்தில் இத்தனை தவறுகள் என்றால் தமிழகம் முழுவதும் நிலை என்னவாயிருக்கும் என்ற கேள்விகளை எழுப்புகிறது. பல ஆண்டுகளாக தமிழகத்தில் காவல்துறை விசாரணை என்ற பெயரில் அத்துமீறுவதும், காவல்துறையை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்கள் தாக்கப்படுவதும், சிறைச்சாலை மரணங்களும் நடந்தேறிக் கொண்டேயிருக்கின்றன. காவல்துறையின் கண்காணிப்பில் நிகழும் மரணங்கள், இந்தியா முழுவதும் நடக்கும் பெருங்குற்றம். அதில் தமிழகம் இவ்வகை மனித உரிமை மீறல் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது என்பது வருந்தத்தக்க விஷயம்.

காவல்துறையின் வரம்பு மீறல்கள், சாமானியனை அவமரியாதையாகப் பேசுவதில் தொடங்கி, இன்று மக்களின் பாதுகாப்பையும், வாழ்வையும் அச்சுறுத்தும் அளவுக்கு ஆளும், ஆண்ட கட்சிகள் வளர விட்டிருக்கிறார்கள். மக்கள் நீதி மய்யம், மக்கள் பாதுகாப்பினை அச்சுறுத்தும் இந்தத் தவற்றினை வேரோடு அகற்றிட முயற்சிகளைத் தொடங்கியிருக்கிறது.இதன் முதல் கட்டமாக, தமிழகத்தின் ஆண்ட, ஆளும் கட்சிகள் தொடர்ந்து புறக்கணித்து வரும் காவல் துறையின் சீரமைப்பை உண்மையாகவும், நேர்மையாகவும் செயல்படுத்திட சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கைப் பதிவு செய்திருக்கிறோம்.

உச்ச நீதிமன்றம் காவல் துறையின் அதிகாரத்தைக் கண்காணித்திடவும், அதிகரிக்கும் பணி அழுத்தம் அவர்களைப் பாதிக்காமல் மக்கள் பணியாற்றிடச் செய்யும் வகையில் பலமுறை திட்டங்களையும், வழிமுறைகளையும் வழங்கியிருக்கிறது. அந்த வழிமுறைகளை தமிழக அரசு பின்பற்றிட நீதிமன்றம் உத்தரவிடவும், கண்காணிக்கவும் வேண்டி இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.ஒவ்வொரு மாநிலமும் காவல் துறையினரின் தவறுகளையும், அத்துமீறல்களையும் குறித்துப் பொதுமக்கள் புகாரளிக்க ஏதுவாக, காவல்துறை புகார் அமைப்பினை அமைத்து அதை முறையாகச் செயல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்படும் இந்த அமைப்பில், உயர் நீதிமன்ற நீதிபதி பரிந்துரைக்கும் நீதிபதிகள் இடம்பெற வேண்டும். அரசின் கட்டுப்பாடின்றி சுதந்திரமாக இயங்கும் இந்த இயக்கம் அரசியல் அழுத்தங்களில் இருந்து காவல் துறையையும், காவல் துறையின் அத்துமீறல்களில் இருந்து மக்களையும் காத்திடும் வேலையைச் செய்யும்.

ஆனால், தமிழக அரசு பெயருக்கு அமைத்துள்ள மாநில அளவிலான அமைப்பில் காவல் அதிகாரிகளே அந்தப் புகார்களை விசாரிக்கும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது தமிழக அரசு நீதிமன்ற உத்தரவையும் மதிக்கவில்லை, மக்களின் உயிரையும் மதிக்கவில்லை என்பதைத் தெளிவாக்குகிறது.ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தில் கூட முதல்வரே அதை மறைக்க முயன்று அவசர அறிக்கை விட்ட காட்சிகள் நமக்கு காவல்துறை தனித்துச் செயல்படவில்லை, ஆட்சியாளர்களின் ஆதரவோடுதான் செயல்படுகிறது என்பதை வெளிச்சமிட்டு காட்டியிருக்கிறது .

Related Stories: