சென்னை : தூத்துக்குடி அருகே விஷவாயு தாக்கி இறந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், செக்காரக்குடி கிராமத்தில், தனியார் ஒருவருடைய வீட்டில் நேற்று கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்க முயன்ற போது, திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரைச் சேர்ந்த பாண்டி, இசக்கிராஜ், பாலகிருஷ்ணன் மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் ஆகிய நான்கு நபர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் பழனிசாமி, தூத்துக்குடி அருகே விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.இச்சம்பவத்தில் உயிரிழந்த நான்கு நபர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த நான்கு நபர்களின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாய் வழங்க தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன், எனத் தெரிவித்துள்ளார்.