சென்னை: தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு 5 முன்னணி மின்னணு வணிக நிறுவனங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்திற்கு, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க, வெளிநாட்டு துாதர்களுடனான சந்திப்பு, சிறப்பு பணிக்குழு அமைப்பு என, பல்வேறு நடவடிக்கைகளை, அரசு எடுத்து வருகிறது.தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்து, ஐந்து பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களுக்கு, முதல்வர் கடிதம் எழுதி வருகிறார்.
அந்த வகையில் ரகூட்டன் கிரிம்ஸன் ஹௌஸ் நிறுவன முதன்மைச் செயல் அலுவலர் உறிரோஷி மிகிடனி, பி2டபிள்யு நிறுவன முதன்மைச் செயல் அலுவலர் மரிகோ குரூஸ் மெய்ல்லஸ், சீ லிமிடெட் நிறுவன தலைவர் மற்றும் குழு முதன்மைச் செயல் அலுவலர் ஃபாரஸ்ட் லீ, க்யூஓஓ10 பிரைவேட் லிமிடெட் நிறுவனர் மற்றும் முதன்மைச் செயல் அலுவலர் ஹூ யங்க் பே, ஷாலண்டோ எஸ்ஈ ஹெட்குவாட்டர் நிறுவன முதன்மைச் செயல் அலுவலர் ரோபர்ட் ஜென்ட்ஸ் ஆகியோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்து, இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. தமிழகத்தில், புதிய முதலீடுகள் செய்வதில் உள்ள, சாதகமான அம்சங்கள், சிறப்பான தொழில் சூழல் ஆகியவற்றையும், முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.மேலும், புதிய தொழில் முதலீடுகளுக்கு, தமிழக அரசு சிறப்பான ஆதரவை வழங்கும். அவர்களின் தேவைகளுக்கேற்ப, ஊக்கச் சலுகைகளை வழங்கிடும் என்றும், முதல்வர் உறுதியளித்துள்ளார்.