கடலூர் அருகே தூங்கிக் கொண்டிருந்த குழந்தை திடீர் உயிரிழப்பு: தடுப்பூசி போட்டதால் இறந்ததாக பெற்றோர் புகார்!!!

கடலூர்: கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்ட நிலையில் 3 மாத குழந்தை உயிரிழந்திருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உயிரிழந்த குழந்தை நடுவீரப்பட்டு கிராமத்தை அடுத்த புதுப்பாளையத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், ஹேமலதா தம்பதியின் ஷஸ்வின் என்ற 3 மாத குழந்தையாகும்.

நேற்று நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்டதை தொடர்ந்து குழந்தை இறந்துவிட்டதாக பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, சுகாதார மைய மருத்துவர்கள் மற்றும் செவிலியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கூறி குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நடுவீரப்பட்டு காவல்நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் சில நேரம் பரபரப்பு நிலவியது. நேற்று நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. அதில் குழந்தை ஷஸ்வினுக்கு தடுப்பூசி போடப்பட்டதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். இரவில் நன்றாக தூங்கிய குழந்தை காலையில் அசைவின்றி கிடந்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தங்கள் குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதே இறப்பிற்கு காரணம் என்பதே இவர்களின் குற்றச்சாட்டாகும். இதையடுத்து, குழந்தையின் இறப்பிற்கு காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியாக தெரிவித்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Related Stories: