அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் மேலக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த நாகூரான்-செல்வி தம்பதியரின் மகளான 7 வயது சிறுமி நேற்று முன்தினம் திடீரென காணாமல் போயுள்ளார். இதுகுறித்து ஏம்பல் காவல்நிலையத்தில் நேற்று அவர் புகார் அளிக்கவே, சிறுமியை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை அங்குள்ள கண்மாயில் இருந்து சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அப்போது சிறுமியின் உடலில் காயங்கள் இருந்துள்ளன. இதனால் அவர் கொலை செய்யப்பட்டு கண்மாயில் வீசப்பட்டு இருப்பது உறுதியான நிலையில், அதற்கான காரணம், அவரை கொலை செய்தது யார் என்பது தெரியவில்லை. இதையடுத்து சிறுமியின் சடலம் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூராய்வுக்கு அனுப்பப்பப்பட்டது.