×

வணிகத் தொடர்புக்கு ஆதாரமாக அழகன்குளத்தில் கிடைத்த வெளிநாட்டு நாணயங்கள்

மதுரை: வெளிநாட்டு வணிகத் தொடர்புக்கு ஆதாரமாக ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் அரிய வகை நாணயங்கள் கிடைத்திருக்கின்றன.   ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளத்தில் நடந்து வரும் தொல்லியல் அகழாய்வுகள், சுமார் 2400 ஆண்டுகளுக்கு முன்பே உலகின் பல்வேறு நாடுகளுடன் வணிகத்தொடர்பு கொண்டிருந்த துறைமுகமாக, வணிக மையமாக இவ்வூர் இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளது. இவ்வூரைச் சேர்ந்த அசோகன், என்பவது வீட்டில் அரிய வகை வெளிநாட்டு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அசோகன் கூறும்போது, ‘‘எங்களது முன்னோர் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுடன் வணிகம் செய்தவர்கள்.

எங்கள் பூர்வீக வீட்டின் பழைய பெட்டிகளை சுத்தம் செய்தபோது, ஏராளமான பழைய நாணயங்கள் கிடைத்திருக்கிறது. ராஜராஜசோழன் காலத்தைச் சேர்ந்த ஈழ நாணயம், இந்திய, இலங்கை, இங்கிலாந்து நாட்டு வெள்ளி, செப்பு நாணயங்கள், திருவிதாங்கூர் சமஸ்தானம் வெளியிட்ட ‘பணம்’ எனும் வெள்ளி நாணயம் உள்ளிட்டவைகள் வியக்க வைக்கிறது’’ என்றார்.  நாணயங்களை ஆய்வு செய்த, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு கூறும்போது, ‘‘அழகன்குளத்தில் கிடைத்துள்ள ஈழ நாணயம், முதலாம் ராஜராஜசோழன் இலங்கையை வென்ற பிறகு வெளியிடப்பட்டது. இது தேய்ந்த நிலையில் உள்ளது. இந்த நாணயங்கள் மாவட்டத்தின் பெரியபட்டினம், தொண்டி உள்ளிட்ட பல கடற்கரை ஊர்களில் கிடைத்துள்ளன.

திருவிதாங்கூர் சமஸ்தானம் வெளியிட்ட ‘பணம்’ எனும் வெள்ளி நாணயத்தின் ஒருபுறம் சங்கு, மறுபுறம் ‘பணம் ஒன்’ என மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளது. இதில் 1096 எனும் ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. இது கொல்லம் ஆண்டு எனப்படும் மலையாள ஆண்டாகும். இதனுடன் 825ஐ கூட்டி தற்போதைய ஆண்டு கணக்கிடப்படுகிறது. இதன்படி 1921ல் ராமவர்மா என்ற திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் வெளியிடப்பட்டதும், இம்மன்னரைக் குறிக்க ‘ஆர்.வி’ என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிக்கிறது. இதுதவிர, இலங்கை சதம் நாணயத்தில் தமிழ், சிங்களத்தில் சதம் என எழுதப்பட்டுள்ளது. இவை 1929 முதல் 1944 வரையிலான காலத்தில் வெளியிடப்பட்ட செப்பு நாணயங்கள்.

இதில் இலங்கையில் அதிகம் காணப்படும் தாளிப்பனை எனும் மரத்தின் படம் உள்ளது. தற்போதும் இலங்கை பணத்தாள்களில் தாளிப்பனையின் படம் இடம் பெறுகிறது.  இதுதவிர, விக்டோரியா மகாராணி, ஐந்தாம், ஆறாம் ஜார்ஜ் மன்னர் ஆகியோர் காலத்தைச் சேர்ந்த வெள்ளி நாணயங்கள், ஏழாம் எட்வர்டு மன்னர் 1909ல் வெளியிட்ட பிரிட்டனில் புழக்கத்தில் இருந்த பென்னி நாணயம் உள்ளிட்டவைகள் உள்ளன. பல நூற்றாண்டுகளாக அழகன்குளத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கை, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுடன் வணிகத்தொடர்பு கொண்டிருந்ததும், மாவட்டத்தினர் பலர் ஆங்கிலேயர் காலத்தில் இலங்கையில் குடியேறி இருந்ததும் அறிய முடிகிறது’’ என்றார்.

Tags : Alagankulam ,Source , Business Communication, Alayankulam, Foreign Currencies
× RELATED வேளாண் கல்லூரியில் நெல் விதைகள் விற்பனை