சென்னை: சென்னை மாநகராட்சியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. 3 மாதங்கள் ஆன நிலையிலும் இதனை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 13 மண்டலங்களில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மண்டலத்தில் ராயபுரம் மண்டலம் முதலிடத்தில் உள்ளது.
சென்னை மாநகராட்சியில் தற்போது வரை 60,533 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 36,826 பேர் குணமடைந்துள்ளனர். 929 பேர் உயிரிழந்துள்ளனர். 22,777 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தவிர்த்து பிற மாவட்டங்களை சேர்ந்த 805 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 59.27 சதவீதம், பெண்கள் 40.73 சதவீதம்.சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்களை கடந்த ஜூன் 29-ம் தேதி வரை வெளியிட்டு வந்த சென்னை மாநகராட்சி ஜூன் 30-ம் தேதி முதல் விவரம் வெளியிடுவதில் மாற்றம் செய்துள்ளது. சென்னையில் தொற்று பாதித்தோர், குணமடைந்தோர், சிகிச்சையில் உள்ளோர் விவரம் இதுவரை வெளியானது. ஆனால், தற்போது, கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோர் விவரம் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் மண்டல வாரியான பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.இருப்பினும் மண்டல வாரியாக கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவருபவர், இறந்தவர்கள், குணமடைந்தவர்களின் விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு., மண்டலம் சிகிச்சை 1 திருவொற்றியூர் 1060 2 மணலி 521 3 மாதவரம் 917 4 தண்டையார்பேட்டை 1,791 5 ராயபுரம் 2,369 6 திருவிக நகர் 1,775 7 அம்பத்தூர் 1,183 8 அண்ணாநகர் 2,948 9 தேனாம்பேட்டை 2103 10 கோடம்பாக்கம் 2,519 11 வளசரவாக்கம் 1080 12 ஆலந்தூர் 801 13 அடையார் 1,593 14 பெருங்குடி 829 இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், பருவமழை காலத்தில் நோய் தொற்று தடுப்பு கூடுதல் சவாலாக இருக்கும் என்றார். சென்னையில் வீடுகளுக்கே சென்று மாநகராட்சி பணியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். பொதுமக்களின் வீட்டிற்கு அருகே சென்று காய்ச்சல் பரிசோதனை செய்து வருகிறோம். இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு வார முழு ஊரடங்கு நல்ல பயனளித்துள்ளது என்றார். சென்னையில் 4000-க்கு மேல் தினசரி பாதிப்பு இருந்தால் கட்டுக்குள் வராத நிலைக்கு போய்விடும். முழு ஊரடங்கு முடிவதற்குள் 30,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என்றார்.