பெரம்பூர்: சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் முனீர் பாஷா (44). இவர், புளியந்தோப்பு ஆடுதொட்டியில் மொத்தமாக ஆடுகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரது அலுவலகம் புளியந்தோப்பு பாடிசன்புரம் லைன் பகுதியில் உள்ளது. கடந்த 21ம் தேதி இவரது அலுவலகத்தின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த ₹61.5 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அதில், பெரம்பூர் தில்லை நாயகம் பிள்ளை தெருவை சேர்ந்த முகமது ஷெரீப் (20) மற்றும் புளியந்தோப்பு ஜெய் நகரை சேர்ந்த சாலமன் (20) ஆகியோர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.