கொரோனா நோயாளிகளின் இருமல், சளி மட்டுமின்றி கண்ணீர் மூலமும் வைரஸ் தொற்று பரவும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் ருத்ரதாண்டவம் இன்னும் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. முதலில் சளி, இருமல் ஆகியவற்றின் மூலம் கொரோனா தொற்று ஏற்படும் என்று கூறப்பட்டது. பின்னர் கொரோனா நோயாளி இருக்கும் இடத்தில் அமர்ந்தாலும், அவர்கள் சிறுநீரை மிதித்தாலும் கொரோனா தொற்று ஏற்படும் என்று கூறப்பட்டது. மேலும் எந்தவித அறிகுறியும் இல்லாமல் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில், பெங்களூருவில் மிண்டோ மற்றும் விக்டோரியா மருத்துவமனை மருத்துவர்கள் புதிய ஆய்வு மேற்கொண்டதில், நோயாளியின் கண்ணீர் மூலமும் கொரோனா தொற்று ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 45 கொரோனா நோயாளிகள், மிண்டோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சில நோயாளிகளின் கண்ணீர் மாதிரிகளை மருத்துவ குழுவினர் சேகரித்து ஆய்வு செய்தனர்.
அதில் அவர்களின் கண்ணீரில் கொரோனா வைரஸ் இருப்பதாக உறுதியாகியுள்ளது. முக கவசம், கை உறை மட்டும் அணிந்தால் போதாது, கண்ணையும் பாதுகாக்க வேண்டுமென்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே யாரேனும் இனி கண்ணீர் வந்தால், அதை உடனே டிஷ்யூ பேப்பர் வைத்து துடைத்து, பத்திரமாக அதை அகற்றுங்கள். இந்த ஆய்வு பற்றிய தகவல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை கண் கலங்காமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பும் மருத்துவர்களுக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.