டெல்லி: கொரோனா கொடும் பாதிப்பின் சோக கதைகள் முற்றுப்புள்ளி இன்றி நீண்டு கொண்டே செல்கின்றன. டெல்லியில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்கு மருத்துவமனை கிடைக்காமல் ஆம்புலன்ஸிலேயே மாண்டு போன மனம் வெதும்ப வைக்கும் நிகழ்வு தற்போது நடந்துள்ளது. டெல்லி அருகே நொய்டா பகுதியில் வசித்த 8 மாத கர்ப்பிணி நீலம். 30 வயதான இவருக்கு ஏற்கனவே சில உடல்நிலை பிரச்சனைகள் இருந்த நிலையில், திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கர்ப்பிணி மனைவியை கணவர் விஜேந்தர் சிங் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். குழந்தை பிறக்கப்போகிறதே என்ற குதூகலத்துடனும், எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டுமே என்ற பதற்றத்துடனும் ஆம்புலன்சில் ஏறிய இத்தம்பதிக்கு சென்ற இடமெல்லாம் அதிர்ச்சி தான் காத்திருந்தது. கொரோனா நோயாளிகள் இருப்பதால் இடம் இல்லை என கூறி மருத்துவமனைகள் கர்ப்பிணியை அனுமதிக்க மறுத்தனர். இவ்வாறு இவர்கள் மன்றாடிய மருத்துவமனைகளின் எண்ணிக்கை ஒன்றல்ல, இரண்டல்ல..8. இதில் அரசு மருத்துவமனை ஒன்றும் அடக்கம். கர்ப்பிணி நீலம் ஆம்புலன்சில் குற்றுயிரும், குலையுயிருமாய் இருந்த நிலையில், இறுதியாக ஒரு மருத்துவமனையில் அனுமதி கிடைத்தது.