அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சிக்கு தாமிரபரணி, வைகை குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. குடிநீர் ஏற்றுவதற்காக நகராட்சி அலுவலகம், திருச்சுழி ரோடு, கரும்புலி வீரப்பன் பார்க், நேதாஜி ரோடு, ஜவஹர் சங்கம், அஜீஸ்நகர், டவுன் காவல்நிலையம் பின்புறம், மதுரை ரோடு, காந்தி மைதானம் அந்திக்கடை பொட்டல் ஆகிய பகுதிகளில் குடிநீர் மேல்நிலைத்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் குடிநீர் ஏற்றப்பட்டு அந்தந்தப் பகுதிகளுக்கு தொட்டிகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது, இந்த குடிநீர் தொட்டிகளை மாதம் ஒருமுறை பராமரிப்பு செய்ய வேண்டும். அத்துடன் தொட்டியை சுத்தம் செய்து பிளிச்சிங் பவுடர் தெளித்து பின்னர் குடிநீர் ஏற்றி விநியோகம் செய்ய வேண்டும். ஆனால் நகரில் உள்ள 9க்கும் மேற்பட்ட மேல்நிலைத்தொட்டிகளை சுத்தம் செய்து மாதக்கணக்காகிறது. இதனால் தொட்டியில் உள்ள குடிநீரில் மண் தேங்கி கிடக்கிறது. இதனால் குடிநீர் விநியோகம் செய்யும் போது தண்ணீர் கலராக மண்ணோடு சேர்ந்து வருகிறது. இதனால் தண்ணீர் கலங்கலாக வருவதாகவும், நாற்றம் எடுப்பதாகவும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.