ஈரோடு: ஊரடங்கு தளர்வை தொடர்ந்து, காவிரி ஆற்றில் சாயக்கழிவுகள் கலக்கப்படுவதாகவும், சாயப்பட்டறைகள் விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ஊரடங்கு தளர்வை தொடர்ந்து, காவிரி ஆற்றில் சாயக்கழிவுகள் கலப்பது அதிகரித்திருக்கிறது. 500க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இயங்குவதால் விதிமுறைகளை மீறும் சாயப்பட்டறைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரையில் 500க்கும் மேற்பட்ட சாய தொழிற்சாலைகளும், 30க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றப்படுவது என்பது தொடர்கதையாக மாறியுள்ளது. தற்போது ஊரடங்கு காரணமாக ஆலைகள் மூடப்பட்டிருந்தன. இதனால் சாயக்கழிவுகள் மற்றும் தோல் கழிவுகள் வெளியேறுவது முற்றிலுமாக தடுக்கப்பட்டிருந்தது. இதனால் காவிரி மற்றும் காலிங்கராயன் நீர் நிலைகள் மாசடையாமல் பாதுகாக்கப்பட்ட ஒரு சூழ்நிலையில், ஊரடங்கின் தளர்வின் விளைவாக தற்போது இந்த ஆலைகள் மீண்டும் இயங்க தொடங்கியிருகிறது. இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக கழிவுகள் மீண்டும் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஈரோடு அக்ரகாரம் பகுதியில் இருக்கக்கூடிய திட்டக்காரன்பலம் வழியாக இதுபோன்ற கழிவுகள் வெளியேறி காவிரியில் கலந்து வருகிறது.