சென்னை: முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களை அனுமதிக்க கூடாது வணிகள வளாகங்களுக்குள் அனுமதிக்க கூடாது என தமிழக அரசு கூறியுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருந்தாலும் 5ம் கட்ட நடைமுறையாக கடந்த 1ம் தேதி முதல் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு தற்போது நடைமுறையில் உள்ளது. புதிய தளர்வுகளுடன் 5 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 8ம் தேதி முதல் வணிக வளாகங்கள் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடைகள், பிற வணிக நிறுவனங்கள் செயல்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களை வணிக நிறுவனங்களுக்குள் அனுமதிக்க கூடாது. வணிக நிறுவனங்களுக்குள் வாடிக்கையாளர்கள் நுழையும் முன் கிருமிநாசினி கொண்டு கைகள் சுத்தப்படுத்த வேண்டும். கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் முகக்கவசம், கையுறை ஆகியவற்றை அணிந்திருக்க வேண்டும். கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இருமல், சளி, காய்ச்சல் இருந்தால் அவர்கள் பணிக்கு வரக்கூடாது. வாடிக்கையாளர்கள் தனிமனித இடைவெளியுடன் பொருட்கள் வாங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும், என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.