அம்பத்தூர்: சென்னை அம்பத்தூர் மண்டலத்தில் நேற்று முன்தினம் வரை அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, கொரட்டூர், பாடி, ஜெ.ஜெ.நகர், பாடிகுப்பம், அண்ணாநகர் மேற்கு விரிவு ஆகிய பகுதிகளில் போலீஸ் உதவி ஆய்வாளர், காவலர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் 726 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், வைரஸ் தொற்றால், 300க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 425பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இது வரை தொற்றால் 7பேர் பலியாகி உள்ளனர்.
மேற்கண்ட பகுதிகளில் மளிகை, காய்கறி இறைச்சி,மீன் கடைகள் மற்றும் டீக்கடைகளில் சமூக இடைவெளியை பொதுமக்கள் பின்பற்றவில்லை. மேலும், பலரும் முக கவசம் அணியாமல் வருகின்றனர். ரேசன் கடைகளில் சமூக இடைவெளியை அறவே பின்பற்றாமல் பெண்கள் உள்ளிட்டோர் கூட்டம், கூட்டமாக வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால், கொரோனா தெற்று வேகமாக பரவி வருகிறது.