போதையில் அதிவேகமாக கார் ஓட்டியதை தட்டிக்கேட்ட பெண்கள் உட்பட 5 பேருக்கு சரமாரி கத்தி வெட்டு: இருவர் கைது

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் 7வது பிரதான சாலை எம்ஜிஆர் காலனியில் நேற்று முன்தினம் இரவு கார் ஒன்று மின்னல் வேகத்தில், பொதுமக்கள் மீது மோதுவது போல் சென்றது. இதை பார்த்த சிலர், அந்த காரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அப்போது, காரை ஓட்டி வந்தவர் மற்றும் உடன் இருந்தவர் போதையில் இருப்பது தெரிந்தது. அவர்களிடம், ‘‘குடியிருப்பு பகுதியில் இப்படி அதிவேகமாக செல்லலாமா,’’ என கண்டித்தனர். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் 2 பேரும், காரில் வைத்திருந்த உருட்டுக் கட்டையால் பொதுமக்களை தாக்கியதுடன், கத்தியால் சரமாரியாக வெட்டினர்.

இதில், 2 பெண்கள் உள்பட 5 காயமடைந்தனர். சத்தம் கேட்டு திரண்ட பொதுமக்கள், அந்த 2 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து, அண்ணாநகர் போலீசில் ஒப்படைத்தனர். இதனிடையே, காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, ஒரு பெண்ணுக்கு தலையில் 14 தையல் போடப்பட்டது. மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.  போலீசார் விசாரணையில், அவர்கள் அண்ணாநகரை சேர்ந்த கார்த்திக் (24), தீபன் (23) என்பதும், மது போதையில் காரை ஓட்டி வந்ததும் தெரிந்தது. அவர்களிடம் இருந்து காரை பறிமுதல் செய்த போலீசார், இருவரிடமும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: