ரயிலில் இருந்து இறங்கியதும் பெண் பலி: கூட வந்த பாவத்துக்கு 92 பயணிகள் தனிமை: ராஜஸ்தானில் பரிதாபம்

ஜெய்ப்பூர்: ரயிலில் வந்த பெண் திடீரென சுருண்டு விழுந்து இறந்ததால், அவர் பயணம் செய்த பெட்டியில் இருந்த 92 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.மும்பையில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் ரயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் மும்பை - ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் வந்து நின்றது. அப்போது, ஒரு பெட்டியில் இருந்து இறங்கிய 65 வயது பெண் ஒருவர், பிளாட்பாரத்தில் காலடி எடுத்து வைத்ததும் திடீரென சுருண்டு விழுந்து இறந்தார். அவருடைய சடலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட பிறகு சளி மாதிரிகள் எடுத்து பரிசோதிக்கப்பட்டது. அதில், அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியானது.

இதையடுத்து, அவர் பயணம் செய்த பெட்டியில் இருந்த 92 பயணிகளும் தனிமைப்படுத்தப்பட்டனர். இறந்த பெண்ணுடன் வேறொரு பெண்ணும் வந்திருந்தார். அவரும் தனிமைப்படுத்தப்பட்டார். இறந்த பெண்ணிடம் செல்போனோ அல்லது வேறு அடையாள அட்டைகளோ இல்லை.  இதனால், மும்பையில் அவர் ரயிலில் ஏறியபோது, கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டாரா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இது பற்றி ரயில்வே அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: