×

மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றாலும் பத்திர பதிவுக்கு இ-பாஸ் பெற தேவையில்லை

* பொதுமக்கள் டோக்கன் காட்டினால் அனுமதிக்கலாம்
* வருவாய்த்துறை செயலாளர் கலெக்டர்களுக்கு கடிதம்

சென்னை: ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கு பத்திரப் பதிவு செய்ய வரும்  பொதுமக்கள் இ-பாஸ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கு செல்ல இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் பத்திரப்பதிவுக்கு யாரும் வரவில்லை. இதனால், சார்பதிவாளர் அலுவலகங்களில் ஒரு நாளைக்கு சராசரியாக 10 ஆயிரம் ஆவணங்கள் பதிவான நிலையில் தற்போது 1000 ஆவணங்கள் கூட பதிவாவதில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பதிவுத்துறை ஐஜி ஜோதி நிர்மலாசாமி தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகத்துக்கு சமீபத்தில் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தில், ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கு பத்திரம் பதிவு செய்ய வரும் மக்களிடம் இ-பாஸ் கேட்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இதையேற்று, பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்கள் டோக்கன் வைத்திருந்தால், அவர்களை அனுமதிக்கலாம் என்று வருவாய்த்துறை செயலாளர் அனைத்து கலெக்டர்களுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

இது குறித்து வருவாய் துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கு பத்திரம் பதிவு செய்ய வரும் பொதுமக்கள் டோக்கன் வைத்திருந்தால் அவர்களை அனுமதிக்கலாம். மேலும், அவர்கள் திரும்ப செல்லும் போது பத்திரம் பதிவு செய்ததற்கான ரசீதை காட்டினால் அவர்களை அனுமதிக்கலாம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : district , District, bond registration, e-pass
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...