உணவகங்களை ஜூன் 8 -ம் தேதி திறக்க அனுமதி; கோவையில் ஓட்டல் மற்றும் உணவகங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியீடு

கோவை: கோவை மாவட்டத்தில் ஓட்டல் மற்றும் உணவகங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. உணவகங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்தக்கூடாது, மேலும் காலை 6 முதல் இரவு 8 மணி வரை ஓட்டல் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமுடக்கத்தின் காரணமாக, நாடு முழுவதும் இரண்டு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த உணவகங்களை ஜூன் 8 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த சனிக்கிழமை அறிவித்திருந்தது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரலல் தடுப்பு நடவடிக்கைகளாக, உணவகங்கள கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்னென்ன என்பது குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்திலும் உணவகங்களை ஜூன் 8 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கலாம் என அறிவிப்பு வெளியானது. தற்போது கோவை மாவட்டத்தில் ஓட்டல் மற்றும் உணவகங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவை,

* தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க, மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள உணவகங்கள் வரும் 8 ஆம் தேதி முதல் திறக்கப்படவுள்ளது.

* அனைத்து உணவகங்களிலும் குளிர்சாதன வசதி பயன்படுத்தக் கூடாது.

* உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.

* வாடிக்கையாளர்கள் கிருமிநாசினி கொண்டு நன்றாக கைகளை சுத்தம் செய்த பிறகே உணவகத்திற்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்.

* நான்கு நபர்கள் அமரும் வகையில் உள்ள இருக்கைகளில் இரண்டு நபர்கள் மட்டுமே அமர்ந்து உணவருந்த அனுமதிக்க வேண்டும்.

* உணவகங்களில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும்.

* உணவகங்களில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் உணவுப்பொருட்களை வைத்து மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

* மாநகராட்சியால் வழங்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றாமல் செயல்படும் உணவகங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

* உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம்.

* உணவு பார்சலை கொண்டு செல்லும் முன் விநியோக ஊழியருக்கு வெப்பப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.

Related Stories: