டெல்லி: ஜூலை மாதத்தில் வெட்டுக்கிளி கூட்டத்தின் மற்றொரு படையெடுப்பை இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என உணவு மற்றும் வேளாண் அமைப்பு எச்சரித்துள்ளது. கிழக்கு ஆப்ரிக்காவில் கடந்த ஆண்டு இறுதியில் பல்கி பெருகிய வெட்டுக்கிளி கூட்டம் அங்கிருந்து அரேபிய பாலை வனத்துக்கு வந்து பாகிஸ்தான் வழியாக மே மாதத்தில் இந்தியாவுக்கு படையெடுத்து வந்தது. தற்போது இந்த வெட்டுக்கிளிகள் வட மாநிலங்களில் உள்ள விளை நிலங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றது. இவற்றை விரட்டும் பணியில் தீயணைப்பு படைகளோடு, கண்காணிப்பு சாதனங்கள், டிராக்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது. தொடர்ந்து, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான ஹெக்டர் பரப்பில் உள்ள பயிர்கள் வெட்டுக்கிளி படையெடுப்பால் சேதமடைந்துள்ளன.