கொடைக்கானல்: கொடைக்கானலில் கொலை செய்யப்பட்டவரின் உடல் பல மாதங்களாகியும் கிடைக்காததால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத முடியாத நிலை உள்ளது. இதனால் உடல் வீசப்பட்ட இடத்தில் போலீசார் மீண்டும் ஆய்வு மேற்கொண்டு உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் - பழநி சாலையில் உள்ள பிஎல் செட் பகுதிக்கு, தேனி மாவட்டம், சின்னமனூரை சேர்ந்த திருப்பதி (48) என்பவர், சில ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்கு வந்துள்ளார். அப்போது இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த ஜான்சிராணிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ஜான்சிராணியின் தங்கைக்கும், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை திருப்பதி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் தனது நண்பர்களான நாகராஜ், சரத்குமார் ஆகியோருடன் சேர்ந்து, 2019, ஆகஸ்ட் மாதம் திருப்பதியை கொலை செய்து, கொடைக்கானல் அடுக்கம் வனப்பகுதியில் சங்கு ஓடை அருகே சுமார் ஆயிரம் அடி ஆழமுள்ள குருடி பள்ளத்தில் உடலை வீசி சென்று விட்டனர். இதுகுறித்து திருப்பதியின் மனைவி முருகேஸ்வரி அளித்த புகாரின்பேரில் கொடைக்கானல் போலீசார் இவ்வழக்கில் துப்பு துலக்கி, மணிகண்டன், நாகராஜ், சரத்குமார், ஜான்சிராணி, சாந்தி ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.