புயல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம்...WHO வலியுறுத்தல்...!

ஜெனிவா; பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு  தற்போது 210-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68,44,222 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் 3,98,129 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 3,335,318 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 236,184 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,649 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 113,233 பேர் குணமடைந்தனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 6-வது இடத்தில்  உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உலகளவில் கொரோனா பாதிப்பு 68 லட்சத்தை தாண்டிய நிலையில், முகக்கவசம் அணிவது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, மருத்துவ பணியில் ஈடுபட்டுள்ளவர்கள்,  தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கட்டாயம் மருத்துவனைகளில் பயன்படுத்தப்படும் முகக் கவசத்தை அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக பரவல் நிலையை எட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும்  60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் எளிதில் தொற்று பாதிக்கக் கூடியவர்களும் மருத்துவ முகக்கவசத்தை அணிய வேண்டும்.

தனிமனித இடைவெளியை கடைபிடிக்க முடியாத பொது இடங்களில் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிவதை ஊக்குவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் முகக்கவசம் மட்டும் தொற்றில் இருந்து பாதுகாக்க  உதவாது என்றும் முகக்கவசத்தை அடிக்கடி தொடுவது மற்றும் கழற்றுவது போன்றவற்றால் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

Related Stories: