புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால், அக்டோபரில் தேசிய விளையாட்டு போட்டித் தொடர் நடத்தப்படும் என்று ஐஓசி தலைவர் நரிந்தர் பத்ரா கூறியுள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் விளையாட்டுப் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், மே 17ம் தேதி அறிவிக்கப்பட்ட 4வது கட்ட ஊரடங்கின்போது வீரர்கள் தனித்தனியாக பயிற்சி மேற்கொள்ளவும், ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய அரங்கில் போட்டிகள் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டது. அதனையடுத்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற ஹாக்கி உள்ளிட்ட அணிகளின் வீரர், வீராங்கனைகள் கடந்த சில நாட்களாக பயிற்சி செய்கின்றனர். ஆனால், அதே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுள்ள குத்துச்சண்டை, மல்யுத்த வீரர்கள் இன்னும் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓசி) தலைவர் நரிந்தர் பத்ரா கூறியதாவது:
விளையாட்டுப் போட்டிகளை மீண்டும் நடத்த வேண்டும் என்பதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். ஆனால் குத்துச்சண்டை, மல்யுத்தம் போன்ற அதிகம் உடல் தொடர்புள்ள, கொரோனா தொற்று எளிதில் பரவ வாய்ப்புள்ள போட்டிகளை உடனடியாக நடத்துவது சிரமம். கொரோனா நோய்க்கு தடுப்பு மருந்தோ, சரியான சிகிச்சை முறையோ கண்டறியப்பட்டால்தான் குத்துச் சண்டை, மல்யுத்த போட்டிகளை நடத்த முடியும். சாதகமான சூழ்நிலை வந்தால் அக்டோபரில் இருந்து தேசிய அளவிலான போட்டிகளை நடத்தலாம். கொரோனாவுக்கு இப்போது நம்மிடம் தீர்வு இல்லை. அதுவரை நாம் காத்திருக்க வேண்டும்.