மாஸ்க் அணியாத வாகன ஓட்டிகளிடம் இதுவரை ரூ.2.10 கோடி அபராதம் வசூல்; 42,087 வழக்குகள் பதிவு...போக்குவரத்து போலீசார்

சென்னை: சென்னையில் மாஸ்க் அணியாத வாகன ஓட்டிகளிடம் ரூ.2.10 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மாஸ்க் அணியாமல் வாகனங்களில் சென்றதாக இதுவரை 42,087 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை மீறி இருசக்கர வாகனத்தில் 2 பேர் சென்றதாக 160 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஐந்தாம் கட்ட பொது முடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில் முதல் கட்டமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் இருந்தே இரு சக்கர வாகனங்களில் வெளியே செல்பவர்கள் மீது வழக்குகள் மற்றும் அபராதம் விதிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

சென்னை நகரில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் அதனை தடுக்கும் பணியில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் தலைமையில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை நகரில் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் செல்வது, இரு சக்கர வாகனத்தில் இரண்டு பேர் பயணித்தால் ரூ. 500 அபராதமும், நடந்து செல்லும்போது முகக்கவசம் அணியாமல் சென்றால் ரூ. 100 அபராதம் விதிக்கப்படும் என்றும், கார்களில் பயணம் செய்தால் ஓட்டுனர் உட்பட 3 பேரும், பைக்கில் ஒருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். இல்லையென்றால் கட்டாய அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் சென்னையில் மாஸ்க் அணியாமல் வாகனங்களில் சென்றவர்களிடம் இருந்து 2 கோடியே 10 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளதாக போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாஸ்க் அணியாமல் வாகனங்கள் சென்றதாக இதுவரை 42 ஆயிரத்து 87 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கட்டுப்பாடுகளை மீறி இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் சென்றதாக 1,160  வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும் சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: