ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவால் சிப்காட் தொழிற்சாலைகளை நம்பியிருந்த 17 ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் ₹750 கோடி வரையில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ராணிப்பேட்டை அடுத்த சிப்காட்டில் கடந்த 1972 ம் ஆண்டு முதல் ராணிப்பேட்டை சிப்காட் திட்ட அலுவலகத்துடன் கூடிய சிப்காட் வளாகம் மற்றும் சிட்கோ தொழில் வளாகம் தொடங்கப்பட்டது. மேற்கண்ட சிப்காட் சிட்கோ ராணிப்பேட்டை போன்ற பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட தோல் மற்றும் ஷூ தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தோல் மற்றும் ஷூ தொழிற்சாலைகளில் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தோல் மற்றும் ஷூ தொழிற்சாலைகளில் ₹750 கோடி வரை அந்நிய செலவாணி ஈட்டித்தந்தவாறு தொழில்கள் நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்பட்டுள்ளதால் ஊரடங்கு தடை உத்தரவு அமலில் இருப்பதால் மேற்கண்ட தோல் மற்றும் ஷூ தொழிற்சாலைகள் அனைத்தும் முடங்கியுள்ளது. இந்த தொழிற்சாலைகளை நம்பியிருந்த 15ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.