11 முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்: தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு

சென்னை: உலகம் முழுவதும் உள்ள 11 முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களின் தலைவர்களுக்கு தமிழ்நாட்டில்  முதலீடு செய்ய வரும்படி முதல்வர் எடப்பாடி அழைப்பு கடிதம்  எழுதியுள்ளார்.  இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டில் ஈர்ப்பதற்கு நாடுகளுக்கான சிறப்பு அமைவுகள், வெளிநாட்டு தூதுவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சிகள் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கான சிறப்பு பணிக்குழு அமைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார்.தற்போது உலகளவில் மோட்டார் வாகன துறையில் தலை சிறந்த 11 முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய நேரிடையாக அழைப்பு விடுத்து தனிப்பட்ட முறையில் முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

தற்பொழுது, வோக்ஸ் வேகன் நிறுவன முதன்மை செயல் அலுவலர் ஹெர்பர்ட் டையஸ், ஸ்கோடா நிறுவன முதன்மை செயல் அலுவலர் பெர்ன்ஹார்டு மையர், மெர்சிடஸ் பென்ஸ் நிறுவன தலைவர் ஓலா கல்லேனியஸ், ஆடி கார் நிறுவன முதன்மை செயல் அலுவலர் மார்கஸ் டியூஸ்மன், ஹோண்டா நிறுவன தலைவர் டகாஹிரோ ஹச்சிகோ, டொயோடோ நிறுவன தலைவர் அக்கியோ டொயோடா, பி.எம்.டபிள்யூ. நிறுவன தலைவர் ஆலிவர் ஜிப்ரே, லக்ஸ்ஜென் டயோயுவான் மோட்டார் கம்பெனி நிறுவன  முதன்மை செயலர் அலுவலர் ஹூ ஹை-சாங், ஜாக்குவார் லேண்ட்ரோவர் நிறுவன தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் ரால்ப் டி. ஸ்பெத், ஜென்ரல் மோட்டார்ஸ் மற்றும் செவர்லெட் நிறுவன முதன்மை செயல் அலுவலர் மேரி டி. பர்ரா மற்றும் டெஸ்லா நிறுவனமுதன்மை செயல் அலுவலர் எலோன் மஸ்க் ஆகிய 11 முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளார். அந்த கடிதத்தில், தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களையும் சிறப்பான தொழில் சூழலையும் குறிப்பிட்டு, புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும் அவர்களின் தேவைகளுக்கேற்ப ஊக்க சலுகைகளை வழங்கிடும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: