சென்னை: ரத்து செய்த டிக்கெட்டுகளுக்கான பணத்தை பெற்றுக் கொள்ள வசதியாக 19 ரயில் நிலையங்களில் சிறப்பு கவுன்டர்கள் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்படும். சமூக இடைவெளியை கடைப்பிடித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பொதுமக்கள் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்களை ரத்து செய்தனர். மேலும் ரயில் டிக்கெட்டை ரத்து செய்ய 3 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 21ம் தேதி தொடங்கி வரும் ஜூன் 21ம் தேதி வரை ரத்து செய்யப்படும் ரயில்களுக்கான முன்பதிவு செய்த டிக்கெட்களை அளித்து கட்டணத்தை திரும்பப் பெற 3 மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது. இப்போது 3 நாட்களுக்குள் டிக்கெட்டை அளித்து கட்டணத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுவதால் இதனை தளர்த்தி ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.அதைப்போல் ரத்து செய்யப்படாத ரயில்களுக்கான டிக்கெட்டை ரத்து செய்ய விரும்பினால் அவர்களுக்கும் கட்டணத்தை திரும்ப பெற 3 மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது