கர்ப்பிணி யானையை அன்னாசிப்பழத்தில் வெடிவைத்து கொன்ற சம்பவம்: ஒருவர் கைது செய்யப்பட்டதாக கேரள வனத்துறை அறிவிப்பு

அன்னாசி பழத்தில் பட்டாசு வைத்து யானையை கொன்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கேரளா வனத்துறை அறிவித்துள்ளது.  யானைகளை தெய்வமாக மதிக்கும் கேரளாவில், கோவில் யானைகளுக்கு அளிக்கப்படும் மரியாதை காட்டு யானைகளுக்கு வழங்கப்படுவதில்லை. அவைகள் உணவுக்காக விவசாய நிலங்களை நாசப்படுத்துவதால் அவற்றை விரட்ட பல்வேறு யுக்திகளை கையாளுகின்றனர்.ஊருக்குள் வரும் காட்டு யானைகளை ஒலி எழுப்பியும், வெடிகளை வெடிக்க வைத்தும் விரட்டுவது பொதுவான பழக்கமாக இருந்து வருகிறது. சில நேரங்களில் கும்கி யானைகள் மூலமும் காட்டு யானைகளை துரத்தும் பணி நடக்கும்.

ஆனால் கேரளாவின் திருவனந்தபுரம் வனப்பகுதிக்குட்பட்ட கூத்தப்பாடம் கிராமத்தில் புகுந்த காட்டு யானைக்கு நடந்த சம்பவம்தான் வன ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.உணவு தேடி ஊருக்குள் வந்த யானை ஒன்றுக்கு அன்னாசி பழத்தில் யாரோ மர்மநபர்கள் வெடி மருந்தை மறைத்து வைத்து உண்ண கொடுத்துள்ளனர். யானை உண்ண தொடங்கியதும் வெடி, வெடித்து யானையின் வாய் பகுதி சிதைந்து போனது. இதனால் தண்ணீருக்குள் இறங்கிய யானை அப்படியே தண்ணீரிலேயே இருந்தபடி உயிரிழந்துள்ளது.கிராமத்திற்குள் புகுந்து பயிர்களை சேதமாக்கும் யானைகளை விரட்ட எத்தனையோ வழிகள் இருக்க இப்படியா செய்வது என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். அன்னாசி பழத்தில் வெடி வைத்து யானையை கொன்றது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யானை கொல்லப்பட்ட தகவல் அறிந்த முதல்வர்  பினராயி விஜயன் வனத்துறை அமைச்சரை அழைத்து இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். யானை கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மன்னார் காடு மண்டல வன அதிகாரி சுனில்குமார் விசாரணை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில், அன்னாசி பழத்தில் பட்டாசு வைத்து யானையை கொன்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கேரளா வனத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து கேரள வனத்துறை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யானையை கொன்ற வழக்கில் யார் யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை கேரள வனத்துறை விசாரித்து வருகிறது. 

Related Stories: