சென்னை: தலைமை செயலகத்தில் உள்ள மக்கள் தொடர்பு பெண் அதிகாரி மற்றும் அவரது உதவியாளருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பணிபுரியும் உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தினசரி நோய் பாதிப்பு ஆயிரத்தை தாண்டும் நிலை ஏற்பட்டுள்ளது. அது மட்டும் அல்லாமல் டாக்டர்கள், செவிலியர்கள், போலீசார் என கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டவர்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, தற்போது அவர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். இதுதவிர மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் வீட்டிலேயே தங்கி இருப்பதால், வெளியில் தெரிவதில்லை. இந்த பரபரப்பான சூழ்நிலையில் சென்னை, தலைமை செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 9வது மாடியில் பணியாற்றி வந்த மக்கள் தொடர்பு துறை பெண் அதிகாரி மற்றும் அவரது உதவியாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.