அவனியாபுரம்: மதுரை விமான நிலையத்திலிருந்து நேற்று பகல் 12.30 மணிக்கு சென்னைக்கு செல்ல வேண்டிய பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பெண் பயணி ஒருவரின் உடைமைகளில் 6 துப்பாக்கி தோட்டா குப்பிகளும், 2 துப்பாக்கி குண்டுகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவரை பெருங்குடி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவரது பெயர் புகாடியா லட்சுமி லாவண்யா (41) என்றும், ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் இவரது குடும்பத்தினர், ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் வசிக்கின்றனர். இவர் பணிபுரியும் நிறுவன அதிகாரி மாதவன். இவரிடம் முறையாக அனுமதி பெற்ற துப்பாக்கிகள் உள்ளதாக லாவண்யா தெரிவித்துள்ளார்.
இந்த தோட்டாக்களை கடந்த 4 வருடங்களாக வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவரை கைது செய்த போலீசார், தோட்டாக்கள் எப்படி வந்தது? அவருக்கு நக்சல் அமைப்பினருடன் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். பக்கத்து வீட்டுக்காரருக்காக அதனை கொண்டு செல்வதாக தெரிவித்ததால் அவரையும் போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர்.