புதுடெல்லி: ஊரடங்கு காலத்தின்போது ரயில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கான கட்டணம் ரூ.1,885 கோடி திரும்ப வழங்கப்பட்டுவிட்டதாக ரயில்வே தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக கடந்த மார்ச் இறுதி முதல் தேசிய அளவிலான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 22ம் தேதி முதலே பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து மார்ச் 21ம் தேதி முதல் மே 31ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் ரயில்களில் பயணிப்பதற்காக டிக்கெட் முன்பதிவு செய்து, ரயில்கள் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக பயணம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு டிக்கெட் முன்பதிவு கட்டணம் திரும்ப வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.