குடியாத்தம்: குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து கொண்டிருந்த டாக்டருக்கு கொரோனா உறுதியானது. இந்த தகவல் வெளியானதும் அவரிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அலறியடித்து ஓடினர்.குடியாத்தம் அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பணியாளர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று காலை வெளியானது. அப்போது. புறநோயாளிகள் பிரிவில் 39 வயது அரசு டாக்டர், அங்கு வரிசையில் நின்றிருந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அந்த டாக்டருக்கு கொரோனா தொற்று உறுதியான தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையறிந்து அவரிடம் சிகிச்சைக்கு வந்தவர்களும், சிகிச்சை பெற்றவர்களும் அதிர்ச்சியடைந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால், மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த டாக்டர் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அந்த டாக்டர், கடந்த சில நாட்களாக புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதனால், அவரிடம் சிகிச்சை பெற்று வந்த அனைத்து நோயாளிகளின் விவரங்கள் சேகரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதேபோல், குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி கிராமத்தை சேர்ந்த 31 வயது கூலிதொழிலாளி, செதுக்கரை சேர்ந்த 31 வயது மருந்தாளுனர் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று நேற்று உறுதியானது. இருவரும் சென்னையில் இருந்து சில நாட்களுக்கு முன்பு திரும்பியவர்கள் என தெரியவந்துள்ளது.