×

சென்னை புறநகரில் ஜூன் 8ல் டாஸ்மாக் கடைகள் திறப்பு?: சென்னை புறநகரில் ஜூன் 8ல் டாஸ்மாக் கடைகள் திறப்பு?

சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் ஜூன் 8ம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 5,300 டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஊரடங்கு உத்தரவின் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்தநிலையில், கடந்த மாதம் 7ம் தேதி அரசின் பல்வேறு தளர்வுகளின் அடிப்படையில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது.பின்னர், உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்ற உத்தரவுபடி மே 16ம் தேதி கடைகள் திறக்கப்பட்டன. அப்போது, சென்னை மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை தவிர்த்து தமிழகம் முழுவதும் 3,700 கடைகள் திறக்கப்பட்டன.

சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடைகளை திறக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜூன் மாதம் டாஸ்மாக் கடைகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியது. மேலும், கடைகளில் கிருமி நாசினி தெளிப்பது, தடுப்புகளை அமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் திட்டமிடப்பட்டது. ஆனால், அரசின் முறையான ஒப்புதல் கிடைக்காததால் சென்னையில் உள்ள கடைகளில் இப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்தநிலையில், சென்னை புறநகர் பகுதிகளில் ஜூன் 8ம் தேதி டாஸ்மாக் கடைகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னையின் உட்புற பகுதியில் 330 டாஸ்மாக் கடைகள் உள்ளன. கடந்த மார்ச் 25ம் தேதி கடைகள் மூடப்பட்டதையடுத்து சென்னை மண்டலத்தில் மதுபானங்கள் முழுமையாக தேக்கம் அடைந்துள்ளன. சாதாரண நாட்களில் தமிழகத்தில் ₹100 கோடிக்கு மதுவிற்பனையாகும். இதில், சென்னை மண்டலத்தில் மட்டும் 25 சதவீதம் விற்பனை நடைபெறும். எனவே, சென்னை மாவட்ட வெளிப்புற பகுதிகளில் கடைகளை திறக்க திட்டமிடப்பட்டது. அதன்படி சின்னமலை, சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் கடைகளின் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது. இதில், சென்னை மாவட்ட உட்புற பகுதிகளில் தற்போது கடைகள் திறக்க வாய்ப்பு இல்லை. சென்னையின் எல்லைப்புற பகுதிகளில் கடைகளை வரும் 8ம் தேதி முதல் திறக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Task Shop ,Chennai ,suburbs , Task Shop , June 8 ,Chennai, suburbs
× RELATED சசிகலா ஒரு வெற்று பேப்பர்: ஜெயக்குமார் கிண்டல்