பாண்டா: ‘சொந்த ஊரை விட்டு வெளி மாநிலத்துக்கு செல்வதை விட, நாங்கள் சுக்கா ரொட்டி சாப்பிட்டாவது இங்கேயே பிழைத்துக் கொள்கிறோம்,’ என்று புலம் பெயர் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர். போக்குவரத்து தடை காரணமாக நடை பயணமாகவும், வாகனங்களிலும், சைக்கிள்களிலும், இவர்கள் சொந்த மாநிலங்களுக்கு அல்லல்பட்டு திரும்பியுள்ளனர். இந்நிலையில், சொந்த மாநிலம் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையில்லாமல் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். இது குறித்து புலம் பெயர் தொழிலாளர்கள், ‘இனி ஒருபோதும் எங்களது சொந்த மாநிலத்தை விட்டு செல்லமாட்டோம். எங்களது கிராமத்திலேயே எந்த வேலையாவது செய்து பிழைத்துக் கொள்வோம். வேறு மாநிலத்துக்கு செல்வதை விட சுக்கா ரொட்டியை சாப்பிட்டு கூட உயிர் வாழ்வோம். ஆனால், வெளி மாநிலங்களுக்கு செல்ல மாட்டோம்,’ என்று தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம், பாண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் சிவ்லாகான். இவர் குஜராத் மாநிலம், சூரத்தில் துணி தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். ஊரடங்கு நடவடிக்கை காரணமாக குஜராத்தில் இருந்து தனது மகள், கர்ப்பிணி மனைவியுடன் நடந்தே தனது பதவால் கிராமத்துக்கு வந்து சேர்ந்துள்ளார்.