சென்னை: கோட்ட அலுவலங்களில் பதவி உயர்வு தொடர்பாக விவரங்களை கேட்கும்போது வயது முதிர்வினால் ஓய்வு, இயற்கை எய்திருந்தாலும் தகவல் தர வேண்டும் என்று பொதுப்பணித்துறை உயர் அதிகாரி உத்தரவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பொதுப்பணித்துறையில் இளநிலை உதவியாளர், உதவியாளர், கண்காணிப்பாளர், நிர்வாக அலுவலர், இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் என 10 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு முன்பு அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருக்கிறதா, அதற்கான தண்டனை விவரம் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படுவது வழக்கம். ஆனால், உயர் அதிகாரிகள் முறையாக அறிக்கை அளிக்காத காரணத்தால் சில நேரங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்படுகிறது.