புதுடெல்லி: கடைசி நேர சட்டச்சிக்கல் காரணமாக, தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்து அரசு திடீர் விளக்கம் அளித்துள்ளது. இந்திய பொதுத்துறை வங்கிகளில் தொழிலதிபர் விஜய் மல்லையா ரூ.9000 கோடி கடன் பாக்கி வைத்துவிட்டு, இங்கிலாந்துக்கு தப்பினார். அவர் மீது சிபிஐ, அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து, மல்லையாவை இந்தியா அழைத்து வர தீவிர முயற்சி மேற்கொண்டன. இதுதொடர்பாக இங்கிலாந்து அரசிடமும் அணுகின. நாடு கடத்தப்படுவதை எதிர்த்து மல்லையா இங்கிலாந்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், மல்லையாவை நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கடைசியாக இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பிலும் மல்லையா தோல்வி அடைந்தார். இதனால் நீதிமன்ற உத்தரவுப்படி அவரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளில் சிபிஐ, அமலாக்கத்துறை தீவிரமாக ஈடுபட்டது. இந்தியா அழைத்து வரப்படும் மல்லையா மும்பை ஆர்தர் சிறையில் அடைப்பதற்கான முழு ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில், மல்லையா நேற்று முன்தினம் இரவு நாடு கடத்தப்பட்டதாக சிபிஐ வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியது. ஆனால் கடைசி நேர சட்டச் விவகாரங்களால் மல்லையா அழைத்து வரப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது.