புதுடெல்லி: கொரோனா பரவலை தடுக்க, கடந்த மார்ச் 25ம் தேதி முதன் முதலாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகு, கடந்த மார்ச் 29ம் தேதி மத்திய அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தாலும், ஊழியர்களுக்கு முழு சம்பளமும் வழங்க வேண்டும். இவ்வாறு வழங்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தது. ஊரடங்கால் நிறுவனங்களின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே, அரசின் இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே.கவுல் மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால்ஆஜரானார். நிறுவனம் ஒன்றில் சார்பில் ஆஜரான வக்கீல் ஒருவர், ‘‘மத்திய அரசு இஎஸ்ஐ நிதியில் இருந்து அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்ச ஊதியம் வழங்கலாம்’’ என்றார். அதற்கு வேணுகோபால் அளித்த பதிலில், ‘‘இஎஸ்ஐ நிதியில் இருந்து இந்த பணத்தை வாங்கலாம். ஆனால், அதை ஊழியர்களுக்கு வழங்க இயலாது’’ என்றார்.