4 வழிச்சாலையாக மாறிய ஆஸ்டின்பட்டி சாலை

திருமங்கலம்: எய்ம்ஸ் மருத்துவமனைக்காக கூத்தியார்குண்டு -ஆஸ்டின்பட்டி ரோடு நான்குவழிச்சாலையாகவும் ஆஸ்டின்பட்டி-கரடிக்கல் சாலை இருவழிச்சாலையாகவும் மாறியுள்ளது. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை திருமங்கலம் அருகே உள்ள தோப்பூர் ஊராட்சியில் ஆஸ்டின்பட்டி காசநோய் மருத்துவமனை அருகே அமைகிறது. இந்த மருத்துவமனைக்காக ஆஸ்டின்பட்டியிலிருந்து கரடிக்கல் வரையிலான 7 கி.மீ சாலை முதல் 3.5 கி.மீ தூரம் வரையில் நான்குவழிச்சாலையாகவும், ஆஸ்டின்பட்டி மருத்துவமனையிலிருந்து கரடிக்கல் வரையிலான மீதமுள்ள 3.5 கி.மீ சாலை இரண்டு வழிச்சாலையாகவும் மாற்றப்பட உள்ளது.

சுமார் 21 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகின்றன. கொரோனாவால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரோடு அமைக்கும்பணிகள் தற்போது துவங்கி நடந்து வருகிறது. உச்சப்பட்டி இலங்கை தமிழர் முகாமிலிருந்து ஆஸ்டின்பட்டி வரையில் நான்குவழிச்சாலைபணிகள் முழுமை பெற்றுள்ளன. இதில் மூனாண்டிபட்டி கிராமத்தின் நுழைவு பகுதியலிருந்து ஆஸ்டின்பட்டி மருத்துவமனை வாளகம் வரையில் பணிகள் நிறைவடையாமல் உள்ளன. இதே போல் உச்சப்பட்டி முகாமிலிருந்து கூத்தியார்குண்டு வரையில் அடுத்தகட்டமாக பணிகள் துவங்கும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.

அதே நேரத்தில் கரடிக்கல் கிராமத்திலிருந்து ஆஸ்டின்பட்டி மருத்துவமனை வரையிலான 3.5 கி.மீ தூரமுள்ள சாலை இருவழிச்சாலையாக மாற்றப்பட்டுவிட்டது.

Related Stories: