×

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழப்பு விநாயகர் சிலை தயாரிப்பு பணி முடக்கம்: மண்பாண்ட தொழிலாளர்கள் பாதிப்பு

விழுப்புரம்: ஊரடங்கு காரணமாக விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மண்பாண்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மும்பை போன்ற வெளி மாநிலங்களுக்கு விநாயகர் சிலை ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளதால், அரசு உரிய நிவாரண உதவிகளை வழங்கிட வேண்டுமென தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24ம்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி சிரமத்திற்குள்ளானார்கள். சிறு, குறு தொழில்களும், கைவினைப்பொருட்கள் தயாரிப்பு, மண்பாண்ட தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில்,  தமிழகத்தில் ஏராளமான மண்பாண்ட தொழிலாளர்கள் தங்கள் பாரம்பரிய மண்பாண்ட தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியை
முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிப்பில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் இத்தொழிலில் 30,000 மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் அதிகளவில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் அய்யன்கோவில்பட்டு, அரசூர், திண்டிவனம், ஓங்கூர், கடலூர், பண்ருட்டி, புதுச்சேரி ஆகிய பகுதிகளிலும் இத்தொழிலில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மண்பாண்டத் தொழிலாளர்கள் பெரும்பாலும் விநாயகர் சிலை தயாரிப்பு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். விநாயகர் சிலை தயாரிப்பு பணி ஆண்டு முழுவதும் நடந்துவரும். விநாயகர் சதுர்த்தியின்போது ஆகஸ்ட் மாதத்தில் விற்பனை நடை பெறும். ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் விநாயகர் சிலை தயாரிப்பு பணி தொடங்கும். இப்பணிகள் ஆகஸ்ட் மாதம் வரை நடைபெறும். நவம்பர் மாதம் தொடக்கத்தில் விநாயகர் சிலைகளுக்கான தயாரிப்பு தொடங்கி நடைபெறும்.

இதன் பிறகு 15 அடி உயரம் வரை பிரம்மாண்ட விநாயகர் சிலை தயாரிப்புக்கான கிழங்கு மாவு, கல் மாவு, சிமெண்ட் மூட்டை பேப்பர்களை வைத்து சிலையின் ஒவ்வொரு பாகங்களாக தயாரிக்கும் பணிகள் நடைபெறும். இப்
பணிகள் ஆகஸ்ட் மாதம் வரை நடைபெறும். ஜனவரி முதல் சிலைகள் தயாரித்து பெயிண்ட் அடிப்பதற்காக வெளியூர்களுக்கு ஏற்றி அனுப்பி வைக்கப்படும். தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் இருந்து சிலைகள் செல்கிறது. இந்த நிலையில் இந்தாண்டு விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் அதிகளவில் உற்பத்தி செய்யும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஊரடங்களால் தொழில் முடங்கி போனதால் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி முடக்கப்பட்டுள்ளது. ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இருந்து வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி இருக்கும். ஆனால் கொரோனா தடையால் சிலை தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.தயாரிக்கப்பட்ட சிலைகளும் வீட்டில் முடங்கிக் கிடக்கிறது. இதனால் வங்கி கடன் வாங்கி முதலீடு செய்து சிலைகள் தயாரிக்கும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலுக்காக அரசு வங்கிக் கடனை குறைந்த வட்டியில் வழங்க வேண்டும், தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு முன் கடனுக்கு அவகாசம் வழங்க வேண்டும், நல வாரியத்தில் அரசின் நிவாரண நிதி வழங்க வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Loss ,Ganesha ,Pottery workers , Loss o, Ganesha statue, paralysis, Pottery workers impact
× RELATED பதினோரு விநாயகர்களின் பரவச தரிசனம்