சென்னை: ரேஷன் கடை ஊழியர்களுக்கு தலா 3 முக கவசங்கள் வழங்க கூட்டுறவு சங்சங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பாலசுப்பிரமணியம் சென்னை மண்டல கூடுதல் பதிவாளர், மண்டல இணை பதிவாளர்கள், அனைத்து கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள் மேலாண்மை இயக்குநர்கள் ஆகியோருக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: தமிழக அரசு சார்பில், அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், கொரோனா நிவாரண நிதியாக ரூ.1000 ரொக்கமும், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகியவை விலையின்றி வழங்கப்பட்டது.
கொரோனா தொற்று இன்னும் குறையாத சூழலில், போதுமான அளவு முகக்கவசம், நியாய விலை கடை பணியாளர்களுக்கு வழங்கப்படுவது அவசியமாகிறது. எனவே, மாநிலம் முழுவதும் உள்ள 32,962 நியாய விலை கடைகளில் பணிபுரியும் 24,859 கடை பணியாளர்களுக்கு பலமுறை துவைத்து பயன்படுத்தக்கூடிய தரமான முகக் கவசங்களை ரூ.60க்கு மிகாமல் கொள்முதல் செய்து ஒரு பணியாளருக்கு தலா 2 முக கவசங்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.