சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக சென்னையில் கிருமி நாசினி தெளிக்க 25 இரு சக்கர வாகனங்களின் சேவைகளை முதல்வர் எடப்பாடி கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக தமிழகமெங்கும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாநகரில் மருத்துவமனைகள், மார்க்கெட் பகுதிகள், பேருந்து நிலையங்கள் என சுமார் 45,000 இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்காக வான்நோக்கி உயரும் ஏணி ஊர்திகள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், சென்னை மாநகரில் உள்ள குறுகிய சாலைகளில் பெரிய வாகனங்கள் செல்ல இயலாத நிலை உள்ளதால், அந்த சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கும் வகையில் மாநில பேரிடர் மீட்பு நிதியில் இருந்து ரூ.1 கோடியே 36 லட்சத்து 25 ஆயிரம் செலவில் 25 இருசக்கர வாகனங்கள் மற்றும் தெளிப்பான்கள் வாங்கப்பட்டன.