×

10ம் வகுப்பு தேர்வு முடிவுக்கு பிறகே பள்ளிகள் திறப்பு: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

கோபி: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுக்கு பின்னரே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம் கோபியில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பள்ளி வேலை நாட்கள் குறைவாக உள்ள நிலையில் ஏற்கெனவே உள்ள பாடத்திட்டங்களை எப்படி நடைமுறைப்படுத்துவது? என்பது குறித்து 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு தற்போது செயல்பட துவங்கி உள்ளது. பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. காலத்தின் சூழ்நிலைக்கேற்ப மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் கருத்தை அறிந்து முதலமைச்சர் முடிவெடுப்பார். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியான பின்புதான் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

பொதுதேர்வை தள்ளி வைக்க கோரிய மனு தள்ளுபடி
தென்காசி மாவட்டம், இனாம்கோவில்பட்டியைச் சேர்ந்த கனகராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ஜூன் 15ம் தேதி நடக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்தி வைக்குமாறு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.  இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர், ‘‘சிபிஎஸ்இ தேர்வை பொறுத்தவரை டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களின் நிலையை கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால், தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்துள்ள சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தான் பிரச்னை. தேர்வு தள்ளிப்போனால் மாணவர்களிடம் மன அழுத்தம் அதிகரிக்கும். அரசின் இந்த முடிவில் தலையிட வேண்டியதில்லை’’ என்றனர். அப்போது, மனுதாரர் மனுவை திரும்ப பெறுவதாக கூறியதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags : Schools ,Minister Sengottaiyan Opening Schools ,Minister , 10th Class Examination, Opening of Schools, Minister Senkottaiyan
× RELATED பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்...