உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே குடோனில் பதுக்கிய 29 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் இருந்து வெளி மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து குடிமை பொருள் குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ஜான்சி, சப்-இன்ஸ்பெக்டர்கள் அகிலன், பாபு, லட்சுமிநாராயணன் மற்றும் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு உளுந்தூர்பேட்டை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிளியூர் ரகுநாதபுரம் கிராமத்தில் உள்ள குடோனில் இருந்து ரேஷன் அரிசியை லாரியில் கடத்துவதாக வந்த தகவலை அடுத்து தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கிருந்து தப்பி ஓட முயன்ற பிரபல அரிசி கடத்தல் மன்னன் விழுப்புரத்தை சேர்ந்த பஷீர்அகம்மது மகன் இப்ராகிம்சு கர்ணா(42) மற்றும் சுலைமான், மணிமாறன், விவேகானந்தன், முருகன் உள்ளிட்ட 9 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் குடோனில் பதுக்கி வைத்து இருந்த 29 டன் ரேஷன் அரிசி, லாரி, மினி லாரி, கார் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.