சீனியாபுரம் கண்மாய் பணிக்காக ஒதுக்கிய ரூ.36.63 லட்சம் மராமத்து நிதி ‘ஸ்வாகா’

* 4 மாதத்தில் கால்வாய், சுவர்கள் சேதம்

* அதிகாரிகள் துணை என குற்றச்சாட்டு

விருதுநகர்: சீனியாபுரம் கண்மாய் மராமத்து பணிகள் தரமாக நடைபெறவில்லை. இதனால் பணிகளுக்கு ஒதுக்கிய ரூ.36.63 லட்சம் என்ன ஆனது என விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர். விருதுநகர் அருகே சீனியாபுரம் கண்மாய் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கண்மாய் 25 ஏக்கர் 81 செண்ட் பரப்பளவில் 1933ம் ஆண்டு 30 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் வகையில் உருவாக்கி உள்ளனர். இருந்தாலும் பாசன வசதி நிலங்கள் ஆயக்கட்டுகளாக இன்று 87 ஆண்டுகளாக மாற்றம் செய்யவில்லை. இந்நிலையில் இந்த கண்மாயின் மடை, கழுங்குகள், கால்வாய்கள் சிதிலமடைந்து கிடந்தது. விவசாயிகள் கோரிக்கை ஏற்று மத்திய, மாநில அரசு 2018-19ம் ஆண்டு நிதியில் ரூ.36.63 லட்சத்தில் மடை, வரத்து கால்வாய், கரை மராமத்து செய்ய ஒதுக்கப்பட்டது. இந்த கண்மாய் மராமத்து பணிகளை மதுரையை சேர்ந்த ஒப்பந்தகாரருக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒப்பந்தம் கொடுத்துள்ளனர். 9 மாதங்களில் பணிகளை முடிக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2019 டிசம்பரில் பணிகளை துவக்கி ஜனவரியில் அரைகுறையாக முடித்த நிலையில் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் பணத்தை பெற்றுக்கொண்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

கட்டுமானப்பணியின் போது கண்காணிக்க வேண்டிய பொறியாளர்கள் கையூட்டு பெற்றுக்கொண்டு கண்காணிக்காததால் ஒப்பந்தம் எடுத்த நபர் மண் வைத்து கட்டுமானத்தை செய்து மேல்பூச்சு பூசி பணத்தை பெற்றதாக தெரிகிறது. ஜனவரியில் கட்டப்பட்ட சுவர்கள், கால்வாய்கள் அதற்குள் சிதிலமடைந்து பழைய நிலையில் காணப்படுகிறது. கால்வாய்கள் வரப்பு வெட்டியது போன்று அரைகுறையாக காணப்படுகிறது. கண்மாயை பராமரித்து மேம்படுத்த ஒதுக்கப்பட்ட நிதி அதிகாரிகள் ஒத்துழைப்புடன் ‘ஸ்வாகா’ செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமூக ஆர்வலர் வடிவேல் கூறுகையில், ‘‘1933ல் உருவாக்கப்பட்ட கண்மாய்க்கு 87 ஆண்டுகள் கழித்து பராமரிப்பு நிதி ரூ.36.63 லட்சம் ஒதுக்கப்பட்டது. அதில் செய்ய வேண்டிய பணிகள் எதுவும் முறையாக செய்யாமல் பணத்தை முழுமையாக கொள்ளையடித்துள்ளனர். களிமண்ணால் சுவர் கட்ட ரூ.36.63 லட்சமா என்ற கேள்வியும் எழுகிறது. விவசாயத்தை மேம்படுத்தி விருதுநகர் மாவட்டத்தை முதன்மை மாவட்டம் ஆக்குவேன் என கூறி பதவியேற்ற முதன்மை அதிகாரி கண்டும்காணாமல் இருப்பது கொள்ளையில் பங்கு போய் இருக்குமோ என்ற  அச்சம் ஏற்படுகிறது’’ என்று தெரிவித்தார்.

Related Stories: